இலங்கை செல்லுமா இந்தியா | மே 19, 2020
புதுடில்லி: இலங்கை தொடர் குறித்து இந்திய அணி இன்னும் முடிவு எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்திய அணி வரும் ஜூலை மாதம் இலங்கை சென்று மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் போக்குவரத்து தடை பட்டுள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஏற்கனவே பல்வேறு தொடர்கள் மாற்றப்பட்ட நிலையில் இலங்கை தொடரும் நடப்பது சந்தேகமாக உள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ரத்தானதால் சோகத்தில் உள்ள இலங்கை அணிக்கு, இந்திய தொடரும் நடக்கவில்லை எனில் பெரும் வருமான இழப்பு ஏற்படும்.
இருப்பினும் இலங்கைத் தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) எவ்வித முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
பொருளாளர் அருண் துமால் கூறுகையில்,‘‘வரும் மே 31ம் தேதிக்குப் பின் எவ்விதமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என உறுதியாகத் தெரியவில்லை. இதனால் இலங்கை தொடர் குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். அதுவரை பொறுத்திருப்போம்,’’ என்றார்.